அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

செவ்வாய், 19 அக்டோபர், 2010

ஊட்டி செல்லும் சாலைகளில் தரமற்ற பணிகள் அம்பலம் : நடவடிக்கை இல்லாவிட்டால் பாதிப்பு நிச்சயம்

நீலகிரியில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைவதற்கு முன்பாகவே, சாலைகளில் ஏற்பட்டுள்ள விரிசல்கள் மூலமாக கடந்த ஆண்டு மேற்கொண்ட தரமற்ற பணிகள் "வெளிச்சத்துக்கு' வந்துள்ளன. "வரும் நாட்களில் ஏற்படும் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை அவசியம்' என வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.















நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 8ம் தேதிக்குப் பின் நிகழ்ந்த மழையின் கோர தாண்டவத்தில் 51 உயிர்கள் பலியாகின; 62 வீடுகள் தடைமட்டமாகின; ஊட்டி பர்லியார் சாலையில் 120 இடங்களில் மண் சரிவும், 20 இடங்களில் பெரிய அளவிலான நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. வீடுகளை இழந்த 3,000க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் மூன்று மாதங்களுக்கும் மேலாக தங்க வேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டது. இந்த பாதிப்புகள் நடந்து ஓராண்டு கூட நிறைவு பெறாத நிலையில், வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன்பாகவே, மீண்டும் இயற்கையின் அச்சுறுத்தல், மலை மாவட்ட மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.














அதே இடத்தில் அபாயம்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஊட்டி - குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்ன பிக்கட்டி அருகே, சாலை இரண்டாக பிளந்து நிலச்சரிவும் ஏற்பட்டது. அந்த பகுதியில் 100 மீட்டர் அளவுக்கு தடுப்புச்சுவர் கட்டி சாலையை சீரமைக்க மூன்று மாதங்களானது. இதற்கு 60 லட்ச ரூபாய் வரை செலவானது. இங்கு போக்குவரத்து துவங்கி ஓராண்டு கூட நிறைவு பெறாத நிலையில், மீண்டும் சாலையில் பிளவு ஏற்பட்ட, அந்த பகுதியே பூமிக்குள் உள்வாங்கி வருவது, மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சாலைக்கு கீழ்ப் பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில் பெரிய துவாரம் ஏற்பட்டு அதில் நிரப்பப்பட்டுள்ள கற்கள் நாள்தோறும் சிதறி விழுந்து வருகின்றன. இதனை பார்க்கும் போதும் இப்பகுதியில் மீண்டும் சாலை முழுமையாக துண்டிக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக, போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.














ஊர்ஜிதமாகும் உண்மை: இந்த சாலையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளின் போது, சென்னையில் இருந்து வந்த புவியியல் துறை வல்லுனர்களும், மண்வள ஆய்வாளர்களும் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். அப்போது, இப்பகுதியில் நீரோட்டம் இருப்பதும் கண்டறியப்பட்டது. அதன்பின்பு தான், இப்பகுதியில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. வல்லுனர்களின் அறிவுரைகளின்படி, மழைநீர் மற்றும் நிலத்தடி நீர் செல்ல போதிய வடிகால்கள் அமைக்காமல் இருந்ததும் தற்போதைய பாதிப்புக்கு முக்கிய காரணமாகும். இதனைப் பார்வையிட்ட தேசிய நெடுஞ்சாலை துறையின், கோவை கோட்ட திட்ட இயக்குனர் மணிவண்ணன் கூறும்போது, ""கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக சாலையில் மேற்பரப்பிலிருந்து வந்த நீர் அப்பகுதியில் தேங்கியுள்ளது. அந்த நீர் தடுப்புச்சுவரின் அடிப்புற மண்ணை பலவீனப்படுத்தி வெளியேற்றியுள்ளது. இதனால், சாலையின் பிடிப்பு தன்மை விலகி பிளவு ஏற்பட்டுள்ளது,'' என்றார். அவரது கருத்து அவசர கதியில் நடந்துள்ள, தரமற்ற பணியை ஊர்ஜிதப்படுத்துவதாக உள்ளது.














முழுமையான விசாரணை வருமா? ஊட்டி- மேட்டுப்பாளையம் சாலையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த நவம்பர் முதல் பல கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் நடந்துள்ளன. இப்பணிகள் அவசர கதியில் நடந்ததாலும், போதிய தரமில்லாமல் மேற்கொள்ளப்பட்டதாலும், தற்போது, பெய்யும் மழையினால் கரையத் துவங்கியுள்ளன. இதற்கு கான்கிரீட் பணிகளில் சிமென்ட்டுக்கு பதிலாக, "கிரசர்' பவுடர் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதில், சில அரசு அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், "கமிஷன்' அடிப்படையில் பங்குண்டு என்பது மக்களின் வெளிப்படையான குற்றச்சாட்டாக உள்ளது. "" இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்; பிற பகுதிகளும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும்,'' என மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உறுதியளித்துள்ளார். ஆனால், இந்த விசாரணை அரசியல் நிர்பந்தம் காரணமாக, வெறும் அறிவிப்புடன் முடிந்துவிடும் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.














கடந்த நவம்பர் மாதம் நடந்த மழை பாதிப்புகளின் போது, 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வீடுகளின்றி பாதிக்கப்பட்டன. அவர்களுக்கு இதுவரை இலவச வீட்டு மனைகளோ, முழுமையான அடிப்படை வசதிகளோ சென்று சேரவில்லை. அனைவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடில்களை சரிசெய்து அதிலேயே தற்போதும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் வடகிழக்கு பருவ மழையால் ஒரு பாதிப்பு ஏற்பட்டால், அதனை மலை மாவட்ட மக்களால் தாங்க முடியாது. அதனால், ஊட்டி அருகே சின்னபிக்கட்டி பகுதியில் ஏற்பட்ட சாலை பிளவை, "அபாய சங்காக' கருதி, அரசு துறைகள், அரசியல்வாதிகள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியமாகும்.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக