அன்புடன் வரவேற்கின்றோம்


you are welcome to our web page

எங்கள் அமைப்புக்கு தங்களால் இயன்ற உதவிகள் ஆதரவினை தந்து உதவுங்கள்

Please give your GOOD IDEAS FOR DEVELOPING
THIS WEBSITE AND DONATE SUPPORT AND HELPS

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம்

வியாழன், 21 ஜூலை, 2011

உரிமைக்கான விழிப்புணர்வு எப்போது?

உரிமைக்கான விழிப்புணர்வு எப்போது?
விழிப்புணர்வு மிக அவசியமாக இருக்கிறது. குடிநீர், ஆரோக்கியம், காற்று ஆகியவற்றைப் பெறுவதில், நோயற்ற வாழ்க்கை வாழ்வதில், விழிப்புணர்வு பெரும் பங்கு வகிக்கிறது.  உணவகங்களைத் தேர்ந்தெடுப்பதில், ஆடைகள் வாங்குவதற்கான தயாரிப்புகளில் எந்த கடைக்குச் செல்வது என்பதை விளம்பரங்கள் தீர்மானித்தாலும், அந்தக் கடை பற்றிய தனது ஞானமே முக்கியமான காரணம் என்ற கற்பனையில்தான், பலரின் உற்சாகம் உயிர் வாழ்கிறது.  

1996-ல் ஒரு சமையல் எண்ணெய் நிறுவனம், ஆரோக்கியமானது, குறைவான கொலஸ்ட்ரால் கொண்டது. எனவே, இதய நோய் குறித்த உபாதையில் இருந்து பாதுகாக்கவல்லது என்று விளம்பரம் செய்ததாம். அதன் காரணமாக அந்த நிறுவனத் தயாரிப்பு இன்று வரை சந்தையில் செல்வாக்கு செலுத்துவதாக, மார்க்கெட்டிங் துறையில் பணிபுரியும் நண்பர் குறிப்பிட்டார்.  மேற்படி விளம்பரம் நம்மை வாங்கத் தூண்டுகிறது. சந்தையில் கிடைக்கும் எண்ணெய் வகைகளில் ஒன்று என்று மட்டும் புரிந்துகொண்டால், நமது மக்கள் விழிப்புணர்வு பெற்றவர்கள் என முடிவுக்கு வரலாம்.  ஆனால், விளம்பரம் குறிப்பிடுவதைப்போல் அந்த எண்ணெய், பயன்பாட்டுக்குப்பின் தன் குடும்பத்தினர், இதய நோய் தொல்லைகளில் இருந்து விடுபட்டதாக உணர்வது, விழிப்புணர்வல்ல. அது மனநலம் சார்ந்தது. விளம்பரம் ஏதோ ஒருவகையில் அக்குடும்பத்தினரை "ரிலாக்ஸ்' செய்திருக்கலாம், ஆனால் தீர்க்காது. ஏனென்றால், இதய நோய் எண்ணெயுடன் மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. மன அழுத்தம், சுற்றுச் சூழல், பணிச்சூழல், குடும்பப் பாரம்பரியம் உள்ளிட்ட எத்தனையோ விதமான காரணங்களை உள்ளடக்கியது என்ற புரிதலே விழிப்புணர்வு. 

 விழிப்புணர்வின் அடிப்படை கல்வியறிவுடன் இணைந்தது. இந்தியாவோ கல்வி அறிவைப் பெறுவதிலும், படித்தவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான பாடத்திட்ட முறையிலும் பின்தங்கி உள்ளது.  நீண்ட போராட்டத்துக்குப் பின், 2009 ஆகஸ்டில் மத்திய அரசு 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகள் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என்ற சட்டத்தை இயற்றியது. இதன் மூலம் இந்தியா கல்வி பெறும் உரிமையை அடிப்படைச் சட்டமாக்கிய 135 நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. அதாவது, இந்தியாவுக்கு முன் 134 நாடுகள் இச்சட்டத்தை இயற்றி, நமக்கு வழிகாட்டியுள்ளன.  2010-ல் சட்டத்தை அமலாக்குவதற்கான விதிமுறைகளையும் உருவாக்கியது. மத்திய அரசு உருவாக்கிய விதிமுறைகளில் கல்வியாளர்கள் பல விமர்சனங்களைச் சுமத்தி வருகின்றனர்.  குறிப்பாக, இலவசக் கட்டாயக் கல்வி என்று அறிவித்த பின் தனியார் பள்ளிகளில் 25 சத இடஒதுக்கீடு பள்ளி இருக்கும் பகுதியைச் சார்ந்த சாதாரண குடிமக்களின் குழந்தைகள் சேர்க்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருப்பது சரியா என்பது சீரிய விவாதத்துக்கு ஆளாகியுள்ளது.  


அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற முழக்கத்தை முன்வைத்துள்ள கல்வியாளர்களும் இதை எதிர்க்கிறார்கள். பணம் கொடுத்துப் படிக்க வைக்கத் தயாராக இருக்கும் பெற்றோர்களில் சிலரும், தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் எதிர்க்கின்றனர். முன்னவரின் எதிர்ப்பு புரிந்துகொள்ளக் கூடியது. பின்னவர்களில், குறிப்பாக பெற்றோர் எதிர்ப்புப் புரியவில்லை. ஒரு பள்ளியில் எப்படி இரண்டு விதமான மாணவர்களைப் பராமரிப்பது. பணம் கொடுத்துப் பயிலும் மாணவர் மீது ஆசிரியர் கவனம் செலுத்துவதுதானே சரி. 25 சத ஒதுக்கீட்டில் வரும் மாணவர், வசதியான பிற மாணவரின் நோட்டு மற்றும் புத்தகங்களைத் திருடிவிட்டால் என்ன செய்வது என பலவாறு பெற்றோர்கள் கேட்டதாகத் தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.  அது மட்டுமல்ல, 2011 பிப்ரவரியில், மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டத்தின் மேற்படி பிரிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். இதை விசாரித்த தலைமை நீதிபதி, நாட்டின் நலன் கருதி, பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினரின் முன்னேற்றத்துக்கான முதலீடு எனக் கருதப்படும், தனியார் பள்ளிகளில் 25 சத ஒதுக்கீடு என்ற கொள்கை குறித்து, யாரும் புகார் கொடுக்க முடியாது என தெளிவுபடுத்தியுள்ளார்.  மகிழ்வுக்குரிய தீர்ப்பாக இதைக் கருதலாம். உச்ச நீதிமன்றம் கடந்த 1993 உன்னிகிருஷ்ணன் என்ற மாணவர் தொடுத்த வழக்கில் தீர்ப்பளிக்கும்போதும், கல்வி பெறுவது, உயிர் வாழும் அடிப்படை உரிமையுடன் இணைந்தது எனக் குறிப்பிட்டதையும் நினைவில் கொள்ளலாம். இந்திய அரசியல் சட்டம் தொடக்கத்தில் இருந்தே, பிரிவு 21 அடிப்படையில் கல்வி பெறும் உரிமை, ஒவ்வொரு தனி நபருக்கும் உண்டு என்பதை வலியுறுத்தி உள்ளது. இங்கு அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி என சட்டம் இயற்றிய பின் தனியாரை நாட வேண்டிய அவசியம் என்ன?  சட்டம் மிகமிகத் தாமதமானது. தாமதமான நீதி மறுக்கப்படும் நீதிக்கு ஒப்பாகும் என சொல்லிக் கொண்டே இருக்கிறோம். ஆனாலும், ஆட்சியாளர்கள் தாமதப்படுத்துகிறார்கள். விடுதலை இந்தியாவில், சுமார் 53 ஆண்டுகள், மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சியே, மேற்படி தாமதத்துக்குக் காரணம்.  மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சத நிதியைத் தொடர்ந்து ஒதுக்கீடு செய்துவந்தால், ஒரு சில ஆண்டுகளிலேயே, அரசே இலவசக் கட்டாயக் கல்வியை வழங்க முடியும் என காங்கிரஸ் அரசு அமைத்த குழுக்கள் கோத்தாரி தொடங்கி, ஆச்சார்யா ராமமூர்த்திவரை திரும்பத் திரும்ப வலியுறுத்தியுள்ளனர்.  ஆனாலும், 

அதிகபட்சமாக 4 சதம் தான் பட்ஜெட்களின்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கியூபா 18.7. மலேசியா 8.1, கென்யா 7, தென் ஆப்பிரிக்கா 5.3, தாய்லாந்து 5.2, எத்தியோப்பியா 4.6, உலக நாடுகளின் சராசரி 4.9, என கல்விக்கான நிதி ஒதுக்கீடு பற்றி அறிய முடிகிறது. ஆனால், இந்தியா 4 சதம் மட்டுமே மொத்த உற்பத்தியில் ஒதுக்கீடு செய்கிறது. இந்தியாவில்தான் தேவை அதிகம். ஆனால், செயல் எதிர்மறையாக இருக்கிறது. மேலே குறிப்பிட்ட நாடுகள் அனைத்தும் இந்தியாவைவிட, பொருளாதார வலிமை கொண்ட நாடுகள் அல்ல என்பது முக்கியமானது.  2009-ல் சட்டம் முன்மொழியப்பட்டபோது, 1 லட்சத்து 71 ஆயிரம் கோடி தேவைப்படுவதாகக் குறிப்பிட்டனர். சட்டத்துக்கான விதிமுறைகளை உருவாக்கும்போது, 2 லட்சத்து 31 ஆயிரம் கோடிகளாக உயர்ந்தது என்பதையும் அரசு விவரம் தெரிவிக்கிறது. இந்த ஆண்டு அமலுக்கு வரும் குறிப்பிட்ட நிலையில், எவ்வளவு தேவைப்படும், எவ்வளவு ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அரசு தெரிவிக்கவில்லை. சி.டபுள்யு.ஜி. (காமன்வெல்த் கேம்ஸ்), 2ஜி (ஸ்பெக்ட்ரம்), கே.ஜி. (கோதாவரி ஆற்றுப்படுகை கேஸ்) என்ற "ஜி' வரிசை ஊழல்களுடன் ஒப்பிடும்போது, கல்விபெறும் உரிமையை நிலைநாட்ட, நம் நாட்டில் பணம் ஒரு பிரச்னை அல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.  அடிப்படை உரிமைகளை நிறைவு செய்யத் தேவையான பணம், ஊழல்களில் கரைகிறது என்பதைப் புரிந்துகொள்வதும் கூட விழிப்புணர்வு சார்ந்ததே. மேற்படி ஊழல் குறித்த விசாரணைக்கு, நமது சி.பி.ஐ. மொரிஷியஸ் சென்றதாகச் செய்திகள் மூலம் அறிய முடிகிறது.  1994 காலத்திலேயே, மொரிஷியஸ் போன்ற நாடுகளில் இருந்து குறுகிய நீண்டகால முதலீட்டாளர்களுக்கு வரி இல்லை என்ற முடிவை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக மொரிஷியஸ் நாட்டுடன், இரட்டை வரி தவிர்ப்பு உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்கிறார் டாக்டர் தர்மேந்திர பண்டாரி.  இக்காலத்தில் மன்மோகன் சிங் நிதி அமைச்சர், அவர் வழிகாட்டுதல் இல்லாமல், மேற்படி உடன்பாட்டுக்கான நெறிமுறைகளை உருவாக்கிய செபி, ஆர்.பி.ஐ. ஆகிய நிறுவனங்கள் செயலாற்றி இருக்க முடியாது. கல்வி உரிமைக்காகத் தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டார்களோ இல்லையோ, ஊழல் பணத்தை முதலீடு செய்ய, கறுப்புப் பணத்தை வெள்ளையாக்க, தொலைநோக்குப் பார்வையுடன் செயல்பட்டுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.  நெடுங்காலமாக அரசு சொல்லும் நிதியாதாரம் இல்லை என்ற செய்தி பொய் என்பதை, இதுபோன்ற தகவல்களில் இருந்து தெரிந்துகொள்ளலாம். இந்த நிதி ஆதாரங்களையும் இதர பல முயற்சிகளாலும் அருகமைப் பொதுப் பள்ளிகளை அமைப்பதில் அரசு ஈடுபட வேண்டும். அருகமைப் பொதுப்பள்ளி என்பது சமூக, பொருளாதார வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து வீட்டுக் குழந்தைகளும் கல்வி கற்கும் பள்ளிகள் ஆகும்.  இந்த முறைதான் அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அணில் சடகோபால் என்ற கல்வியாளர், அருகமைப் பள்ளி முறை அமலுக்கு வந்தால், மிகப்பெரிய அளவில் எரிபொருள் சேமிக்கப்படும். ஏனென்றால், அருகமைப் பள்ளிகளுக்குக் குழந்தைகள் சென்றுவர, பேருந்துகள் தேவை இருக்காது, நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதுகாக்கப்படும் என்று கூறுகிறார்.  தமிழ்நாட்டில்கூட, இலவச பஸ் பாஸ் வழங்க அரசு செய்யும் செலவினமும் குறையும். பஸ் நிறுத்தங்களில் காலையிலும், மாலையிலும் நம் வீட்டுக் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகளும் குறையும்.  சட்டத்தின் விதி குறிப்பிட்டுள்ள 25 சத ஒதுக்கீட்டைத் தனியார் பள்ளி நிறுவனங்கள் மற்றும் பெற்றோர்கள் எதிர்ப்பது தேவையற்றது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. சுகாதாரப் பராமரிப்பில் படித்த நடுத்தர வர்க்கத்தினர் கவனம் செலுத்துகின்றனர். இது பாராட்டுக்குரியதே. ஓட்டலில் அமர்ந்தவுடன் குடிநீர் பாட்டிலுக்கு ஆர்டர் செய்த பின்தான், உணவு வகைகளுக்கு ஆர்டர் செய்யும் குடும்பத்தினர் அதிகரித்து வருவதைக் காணலாம்.  குடிக்கும் தண்ணீர் என்ற வெளிப்படையாகத் தெரியும் பொருள் மீது மட்டுமே நமது பராமரிப்பு அக்கறை இருக்கிறது. சமையல் பகுதியில் உள்ள சுகாதாரப் பராமரிப்புகள் குறித்து நாம் கவலைகொள்வதில்லை. இன்னொரு கோணத்தில் பார்த்தால், உணவுக்கு விலை தருவது நியாயம், சுகாதாரமான குடிதண்ணீருக்கும் விலை தருவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பும் மனநிலை ஏன் உருவாக்கப்படவில்லை.  இப்படி அடிப்படை உரிமை என்ற பட்டியலுக்குள் வரும் பொருள்களை, விலைபேசி விற்பதை அங்கீகரிப்பது, விழிப்புணர்வு பெற்ற சமூகத்தில் இருக்காது. மாறாக, படித்தவர்களே அறியாமையில் இருக்கிறோமோ என எண்ணத் தோன்றுகிறது.  தங்களிடம் பணம் இருக்கிறது என்பதற்காக நடுத்தர மக்கள், தனியார் பள்ளிகளை நாட வேண்டியதில்லை. அரசுப் பள்ளிகள், சிறந்தமுறையில் பராமரிக்கப்பட்டாலே, அரசுப் பள்ளிகள் சிறந்ததாக மாற முடியும். நமது விழிப்புணர்வு மத்திய அரசின் கொள்கைகளைக் கேள்விக்குள்ளாக்கும் வலிமை கொண்டதாக மாற வேண்டியுள்ளது. 


கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக